Saturday, December 17, 2011

வெற்றியின் சார்புகள்

வறண்ட சிந்தனையில் கவிய மறுத்து
ஒருக்கணித்துக் கிடந்தது என் பேனா.
இழந்த மின்சாரத்தில் ஒரு சாரமுமற்று
கதறாமல் கிடந்தது மின்விசிறி.
எட்டாவது முறையாய் எட்ட முயன்று
சாணேறி முழம் சறுக்கியது
சுவற்றோரச் சிலந்தி.
ரேஷன் கடையில் பொழுதிழந்ததை
புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.
ஏழுமுறை முயன்ற கஜினியின் வரலாறை
எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தான் தம்பி.
ஒதுங்க எவ்வாதரவுகளுமற்று இன்னமும்
வெளியைப் பொசுக்கிக் கொண்டிருந்தான் ஆதவன்.
சுற்றெங்கும் விரவிய நிராசைகள் மீதேறி
வென்று கொண்டது என் பேனா மட்டும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

ஒவ்வாத நிகழ்வுகள்.

புழுதியடைந்த அத் தெரு மணற்சிறுவர்கள்
உங்களது நிகழ்வுகளை எடுத்து ஓடிக்கொண்டிருப்பார்கள்
அறிந்த அல்லது அறியா ஓர் வாலிபனின் மிதிவண்டிச் சக்கரத்தில்
அந்த நிகழ்வுகள் உருண்டு கொண்டிருக்கும்
தோள் தாங்கிய கைப்பைக்குள்ளே சில்லரைக்குப் பதிலாய்
அந்நிகழ்வுகளைத் தேடிக்கொண்டிருப்பார் நடத்துனர்
உங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலான அப்பூந்தொட்டிக்குள்ளே
அதே நிகழ்வுகள் பூத்துக் கிடக்கும்
உங்கள் விருப்ப ஓர் தொலைக்காட்சி வழியாய்
உங்கள் நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டிருப்பாள் ஓர் பெண்
பெருங்காற்றிறைத்த மணற் துகள்களோடு
அந்நிகழ்வுகள் உங்கள் வாயிலில் இறைந்து கிடக்கும்
நடு நிசி இரவு வாழ் ஜந்துக்களெல்லாம்
அந்நிகழ்வுகளை உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும்
குழாயடிப் பெண்களும் தங்களுக்குள்ளே
உங்களது நிகழ்வுகளையே உரைத்துக் கொண்டிருப்பார்கள்.
மேல் வானம் பிளந்து கீழ் தரை வெடித்து வெளியேறும்
அம்புலி மாமா வேதாள நிகழ்வுகளைப் போன்றே
சுற்றிய நாற்புறமும் பூதாகரமாய் எழுந்து நிற்கும்
நேற்றைய உங்களின் ஒவ்வாத நிகழ்வுகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

Sunday, December 4, 2011

மாலைத் தேநீர்

கொடும் மழையினூடே கரைந்தோடும்

ஆற்றோர மணல் படுகைகளைப் போல்

ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை

கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய்

மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன

பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும்

சில எம காத உருவங்களையோ

பாத விரல்களினிடையேயான

சேற்றுப் புண் எரிச்சல்களையோ

ஓர் தேநீரின் இதமான கதகதப்பில்

சில மணித்துளிகளாவது அவைகளையற்று

இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள்

மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ

எப்பலன்களுமற்ற உங்களையொத்தாருடையேயான

எவ்விஷயங்களுமற்ற வெற்று சம்பாஷனைகளோ

தேநீர்களன்றி சேயில்லா மலடி போல்

நிறைவுறக்கூடும் அவைகள்.

உங்களையும் மீறிய ஓர் கொடுஞ் சம்பவமொன்றில்

நாவிடறும் துர் வார்த்தைப் பிரயோக நிலையில்

உட்கொள்ளுங்கள் ஓர் தேநீரை.

சில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்

சில துர் நிகழ்வுகள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Friday, December 2, 2011

ஒரு யுகத்திற்கு முந்தைய வார்த்தைகள்

உங்கள் பல்லிடுக்குகள் வழியாய்
இழுத்துப் பிடுங்கப்பட்ட சில வார்த்தைகளில்
உங்களையறியாமல் சில ஜீவன் துடிக்கும்.
சீரற்ற பல பாதைகளிலான இரத்த நாளங்களும்
அப்படியே அள்ளியேற்றுச் செரிக்கும் அவ்வார்த்தைகளை.
உங்களை ஒவ்வாத ஒரு தினத்தை இகழ்ந்து கொண்டும்,
உங்களைப் பகைத்தான்களின் ஒவ்வாத ஒரு தினத்தை
புகழ்ந்து கொண்டும் அவ்வார்த்தைகள்
மெல்ல தன் ஆற்றாமைகளைக் கசிய விட்டபடி
தன் காய் கனிய காலம் காத்துக் கிடக்கும்
கடந்தேறி விட்டவைகளை முற்றுமாய் புறந்தள்ளி விட்டதாயும்
வடுக்கள் உறைந்த பழைய மேனி களைந்து
ஓர் பொலிவு மேனியுடலில் உலாவிக் கொண்டிருப்பதாயும்
மெல்லச் சிலாகித்துக் கொண்டிருப்பீர்கள் எல்லாரிடமும்.
ஒரு பாதி வெளுத்த சூரியனின் ஓர் ஆரம்பப் பகலிலேயோ
அல்லது முற்றுமாய் தன்னைக் கரைத்த
அச்சூரியனின் இறுதி விடைத் தருணங்களிலேயோ
ஏழு மலை மற்றும் ஏழு கடல் தாண்டிச் சேர்த்ததாயும்
அல்லது எம்மனிதப் பதர்களும் அண்டியிராத
ஓர் கோட்டைக் கொத்தளமொன்றில் ஒழித்து வைத்ததாயும்
நீங்கள் நம்பிக் கொண்டிருந்த அவ்வார்த்தைச் சொற்றொடர்கள்
கணப் பொழுதில் உங்களைச் சேரும் அவ்வேளையில்
உங்கள் பொலிவு மேனியுடல் களைந்து
பின்னரும் ஒரு ராட்சஸனாய் உருவேற்றுக் கிடப்பீர்கள்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Tuesday, November 29, 2011

தலைப்புச் செய்திகள்.

அப்படித்தான் அவர்கள் சொல்லியிருப்பார்கள்

மூத்திரப்பை வழியாய் உயிர் கீழிறங்கி விடுவதுமாயும்

எவ்வுறுப்புக்களுமற்ற வெறும் பிண்டமாய்

மல்லாக்கக் கிடந்து சுவாசித்துக் கிடப்பதுமாய்

பிரகாசித்து ஒளிரும் சூரியப் பகலை

அவ்விஷயங்கள் மட்டுமே குருட்டித்து விடுவதுமாயும்

அவைகளையேற்று உலாவிக் கொண்டிருப்பார்கள்

அறுசுவை உணவுகளற்று அவர்களின் சிறு பெருங் குடல்கள்

அவ்விஷயங்களைக் கொண்டே செரித்துக்கொண்டிருக்கும்

அவர்களையெதிர்ப்பட்ட ஆண் பெண் தலைகளெல்லாம்

அவ்விஷயங்களணிந்து கிடக்கும் தலையேற்றக் கிரீடங்களாய்

உலகளாவிய எவ்விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும்

அவவ்விஷயங்களைக் கொண்டே நிறைவு செய்வார்கள்

அவர்களுக்குண்டான ஆர்வ மிகுதிகளை விடவும்

அடுத்த வீட்டொருவனின் துர் மரணத்தை விடவும்

அவ்விஷயங்கள் அதி முக்கியத்துவப்படும் அவர்களுக்கு

அவ்விஷயங்களைக்கொண்டே உடுத்திக் கிழிப்பதுமாய்

அவ்விஷயங்களைக்கொண்டே சுவாசித்துக் கிடப்பதுமாய்

அவ்விஷயங்களைக்கொண்டே அவர்களை அவர்கள்

நிர்மாணித்துக் கிடப்பதுமாய் உருவகப்படுத்திக் கிடப்பர்கள் அவர்கள்

எல்லாம் ஓய்ந்தொழிந்து போன பிந்தைய தினமொன்றில்

நான்கு நாட்களுக்குப் பிந்தைய மூன்றாப் பக்கப் பெட்டிச் செய்தியாய்

வாசலருகே கேட்பாரற்றுக் கிடக்கும் அவ்விஷயங்கள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.

எடுபடா இரகசியங்கள்.

அவன் கூற விளைந்திருந்தான்

இதயமிடறிய இடர்பாடொன்றை

உட்புகுந்து உடலறுக்கும்

உள்ளங்கள் ஒவ்வாததை

பார்த்ததும் பளிச்சென்பதைப்போல்

எவருமெளிதில் கண்டுகொள்ளவியலாததை

தலையிலமர்ந்து தன் புத்திக்குப் பதிலாய்

தானாய் தனித்தியங்குமதை

முற்றிலுமாய் கூறிவிடுவதென்று

பிரணாயாமும் ஏற்றான்

அவன் அறிந்திருந்தான்

அவ்வார்த்தையின் செயல்பாடுகளை

இன்னும் உணர்ந்திருந்தான்

அதன் மூலத்திய விளைவுகளை

கூறியும் முடித்திருந்தான்

எப்பொழுதுமாய் இயங்கியது உலகம்

நேற்றையைப் போலும்

அதற்கு முந்தைய நாட்களைப் போலும்

இன்னும் பிரகாசமாய்..

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Wednesday, July 28, 2010

விடுபட்டுப்போன மழை

அறுந்து விழும் நூட்களாய்
அப்பொழுதே ஆர்ப்பரிப்பைத் துவக்கியிருக்கும்
மழைக்கு முந்தைய தூறல்கள்
ஆனால் மனதின் மையப் பகுதியில்
பின்னிப் பிடலெடுத்துக் கொண்டிருக்கும்
ஒரு பெரு மகிழ்ச்சி மழை
விரும்பி ஏற்று உள்ளுக்குறிஞ்சும்
மழைக் காலத்திய மண் வாசனைகள்
கருந்துணியிட்டு மறைத்தாற் போல்
மங்கிய மாலைப் பொழுது
இன்னும் மழை தொடராதாவென்ற
மனம் படர்ந்த ஏக்கத்தில்
ஜன்னலுக்கப்பால் நீண்ட கரங்கள்
குளம் கட்டிய மழை நீரில்
கால் தூக்கிய நடை
அவ்வப்போது உடல் வெடவடத்துச் செல்லும்
காற்றில் கலந்த மிச்சச் சாரல்கள்
மறு நாளைய வெயிலாக்கிரமிப்பு வரை
மனதை விட்டகலாது
மழை நேரத்திய மகிழ்ச்சி
ஓங்கி வலுத்துச் சூழ்ந்த சூளைச் சுவர்களில்
உரத்துக் களைத்த சின்னத்திரைகளில்
விடுபட்டுப் போன மழை நேரத்திய மகிழ்ச்சிக்காக
கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு
மறு நாள் ஜன்னல் திறக்கையில்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

அறிவிலி

இருளில் கரையும் ஈசலின் தவிப்பு
தூர ஒளிரும் சிம்னியில் ஆசுவாசம்
பறந்து விரையும் தேடலின் துவக்கம்
அருகில் அடைந்த ஆவல் மிகுதி
அத்துணையும் சேர்ந்த ஆனந்தக் கூத்தாடல்
எல்லாம் கிடைத்த ஏக்கச்செறிவு
ஒன்று மட்டும் எஞ்சியதாய் ஓரம் ஒரு சோகம்
அதையும் நாடிய அளவற்ற ஆவல்
பாய்வதற்கான மெல்லிய பதுங்கல்
மீறிய ஆவேசப் பாய்தல் இலட்சிய இலக்கில்
கரிந்து கரை சேரும் பரிவு மரணம்
அடுத்தவர்களுக்கான எச்சரிக்கையாய்
ஒரு ஓரம் அதன் பிணம்
எல்லாம் கண்டும் சீறிக் கிளம்பும்
இன்னொரு ஈசலாய் என் பயணத் துவக்கம்
உன் திசைகள் நோக்கி.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

கனவுத் தூதுவன்

கழிந்த எல்லா நாட்களைப் போலவே
குறுகி வளைந்து கரடுமுரடாய்ச் செல்கிறது
என் வழிப் பாதைகள்
மரங்கள் தூவும் மகரந்தப் பூக்களும்
மனம் இளக்கியோடும் மெல்லிய காற்றசைவுகளும்
அவ்வசைவுகள் கொண்டு சேர்க்கும்
பறவைச் சப்தங்களும்
வானச் சூரியனின் விசையழுத்தமற்ற இளஞ்சூட்டுக் கதிர்களும்
பயண வாழ்த்துக்களிடும் பாதை வழியர்களும்
என் பாதை பக்கமும் படுப்பதில்லை
படர்ந்து நீண்ட பிரயாசைப் பிரயாணங்களில்
தனித்துப் போகிறது என் பாதை மட்டும்
இரவு தாண்டிய என் கனவுகள்
என் வழி நோக்கிய பாதைகளிடுகின்றன
என் மனம் ஆட்கொண்ட கனவுத்தூதுவனொருவன்
எனக்குண்டான திசை தீட்டுகிறான்
கழிந்த கால கருமாந்திரங்களைச் சாடியும்
அதைப் போலல்லாதொரு புது விதி தேடியும்
சீரழிந்துச் சிதைப்பட்ட
கதையொன்றைச் சொல்லிச் சொல்லியே
பிரயாசையூட்டுகிறான் அப்பாதை வழி கிளர்ந்தெழ
உருவங்களும் உணர்வுகளுமற்ற அத்தூதுவனின்
வார்த்தைகளற்ற வழி கூறும் அவன் மொழிதல்களில்
எது எப்படி எதற்கென்றறியா ஒரு கரு நோக்கி
சதா ஏற்றத்தில் ஏறிச் செல்கிறது
பின்னடைவுகளுற்ற என் பிரயாணங்கள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தனிமைப் பிரயோகங்கள்

விக்கலிலும் திக்கலிலும் ஊனறுத்து
உயிருடைத்துச் செல்லும்
மீறிய தனிமைப் பிரயோகங்கள்
சீரிய பாய்ச்சலில் உட்குத்தி நுழைந்து
மறு வழியாய் நிதானித்து வெளியேறி
வேறு வழியாய் மீண்டும் பாய்ந்து
சீர் வரிசையில் தைத்தெடுக்கின்றன
விட்டு தொட்டு நிற்கும்
அவளைப் பற்றியானவைகள்;
சலனமற்றக் குட்டைகள் வழி
நேரிய பிம்பங்களிட்டுச் செல்லும்
சிறுவனின் தவளைக் கல்லாய்
மணிக்கொரு முறை விரைந்தோடுகிறாள்
சீரற்று எகிறும் லப்டப்களினூடே
பரந்து விரிந்த வனாந்திரம்
திடமாய் வீரியமிட்டு நிற்கும்
எல்லைகளற்ற காட்சிப் பொருள்கள்
இந்தச் சூழலின் மையமிருந்தும்
எட்ட மறுக்கும் பார்வைகளில்
முட்டி நெருக்கும் நாற்புற நெருக்கங்களில்
அமிழ்ந்திருப்பதைப் போன்றதொரு பிரமிப்பு
உன் இல்லாமைகளில்
இவ்வளவுகளுக்குமிடையில்
நேர்ந்து கழிந்த கடந்தவைகளுக்காக
மன்னித்து விட்டேனென்ற ஆங்கிலப் பதத்தை
குலைந்து நெளிந்து கூறி முடிக்கையில்
ஒழுகித் தீர்த்த கரிய மேகமாய்
சுத்தமாய் போகிறேன் ஒவ்வொரு முறையும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ